வட மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 4 ஆயிரத்து 83 கொரோனா தொற்றாளர்கள்

corona 2
corona 2

வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 4 ஆயிரத்து 83 கொவிட்-19 நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 106 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறையின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன

.வடக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 515ஆக உயர்வடைந்துள்ளது. வடக்கு மாகாணத்தில் நேற்று செப்ரெம்பர் 7ஆம் திகதி 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 246 பேரும் வவுனியாவில் 160 பேரும் கிளிநொச்சியில் 99 பேரும் முல்லைத்தீவில் 39 பேரும் மன்னாரில் 31 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாகாணத்தில் நேற்றைய தினம் 22 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தனர். வவுனியா மாவட்டத்தில் மட்டும் 16 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் 5 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.செப்ரெம்பர் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 83 கொவிட்-19 நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 106 பேர் உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆயிரத்து 724 தொற்றாளர்களும் வவுனியாவில் ஆயிரத்து 56 தொற்றாளர்களும் கிளிநொச்சியில் 889 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 275 தொற்றாளர்களும் மன்னாரில் 139 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கடந்த ஒரு வாரத்தில் வவுனியா மாவட்டத்தில் 45 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 43 பேரும் கிளிநொச்சியில் 9 பேரும் முல்லைத்தீவில் 8 பேரும் மன்னாரில் ஒருவரும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் 2020 மார்ச் தொடக்கம் டிசெம்பர் வரை வவுனியா மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொவிட்-19 நோயினால் உயிரிழந்தார். எனினும் நேற்று செப்ரம்பர் 7ஆம் திகதிவரை 515 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். ஓகஸ்ட் மாதத்தில் அதிகப்படியாக 228 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகப்படியாக 303 பேரும் வவுனியா மாவட்டத்தில் 119 பேரும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சியில் 45 பேரும் முல்லைத்தீவில் 28 பேரும் மன்னாரில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.வடக்கு மாகாணத்தில் நேற்று வரை 30 ஆயிரத்து 912 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 474 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 635 பேரும் வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 788 பேரும் முல்லைத்தீவில் 2 ஆயிரத்து 192 பேரும் மன்னாரில் ஆயிரத்து 823 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.