நாட்டில் நேற்றைய தினம் 2,856 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரையில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 477,636 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது. கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 18 ஆயிரத்து 147 பேர் நேற்று குணமடைந்ததனர்.
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 8 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 58 ஆயிரத்து 656 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, ஹல்துமுல்ல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 97 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் ஜீவன பிரசன்ன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறாம் திகதி 293 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில், குறித்த நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மேலும் 30 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.