தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக விருந்தகங்கள் அதிகளவு கட்டணம் வசூலிப்பதை தடுக்க சுகாதார தரப்பு அவதானம்

download 13
download 13

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படும் சில விருந்தகங்களில் அதிகளவான தொகை அறவிடப்படுமாயின் அது குறித்து அவதானம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் அவர்கள் விருந்தகங்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

அவர்கள் தனிமைப்படுத்தப்படும் குறித்த காலப்பகுதிக்கு மாத்திரம் அதிகளவான தொகை அறவிடப்படுவதாக சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தற்போதைய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாளாந்தம் 2000 பேர் வரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு வருகை தரும் இலங்கையர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள், இரண்டு தடுப்பூசிகளை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் விருந்தகங்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

தனிமைப்படுத்தும் காலப்பகுதிக்கு மேலதிகமாக கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதற்கமைய , நட்சத்திர விருந்தகம் ஒன்றில் நாள் ஒன்றுக்கு தனிநபர் ஒருவர் மாத்திரம் தங்கக்கூடிய அறைக்கு 170 அமெரிக்க டொலர் அறவிடப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

இது இலங்கை ரூபாவில் சுமார் 34 ஆயிரம் பெறுமதியாகும்.

குறித்த விருந்தகத்தில் இரண்டு பேர் தங்கக்கூடிய ஒரு அறைக்கு நாளாந்தம் 210 அமெரிக்க டொலர் அறவிடப்படுகின்றது.

இது இலங்கை ரூபாவில் 42 ஆயிரம் பெறுமதியாகும்.

இது தவிர கொரோனா பரிசோதனைகளுக்கு 40 அமெரிக்க டொலரும், காப்பீட்டு தொகையாக 12 அமெரிக்க டொலரும் விமான நிலைய போக்குவரத்து கட்டணமாக 55 டொலரும் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மற்றுமொரு நட்சத்திர விருந்தகத்தில் தனிநபர் ஒருவர் தங்கக்கூடிய அறைக்கு 231 அமெரிக்க டொலர் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இது இலங்கை பெறுமதியில் சுமார் 46 ஆயிரம் ரூபாவாகும்.

இருவர் தங்கக்கூடிய அறைக்கு 265 அமெரிக்க டொலர் அறவிடப்படுகின்றது.

இது இலங்கை பெறுமதியில் சுமார் 53 ஆயிரம் ரூபாவாகும்.

மற்றுமொரு நட்சத்திர விருந்தகத்தில் தனிநபர் ஒருவர் தங்கக்கூடிய அறைக்கு 235 அமெரிக்க டொலரும் இருவர் தங்கக்கூடிய அறைக்கு 297 அமெரிக்க டொலரும் அறவிடப்படுவதாக தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் விரைவில் பரிசோதனை அறிக்கையை பெறக் கூடிய ரெப்பிட் பி.சி.ஆர் பரிசோதனை வசதிகள் காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான செயற்பாடு இடம்பெறுகின்றது.

இந்த விடயம் குறித்து கட்டுநாயக்க விமான நிலையத்தை தொடர்பு கொண்டு வினவிய போது.

சுகாதார தரப்பினரின் அனுமதி கிடைக்கப்பெறுமாயின் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களுக்கும் ரெப்பிட் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயத்தில் தமது தரப்பிலிருந்து மேற்கொள்ள கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.