வவுனியா மடுவில் பிள்ளையார் சிலை அந்தோனியார் சிலையாக மாறியதால் பரபரப்பு!

IMG 65f8f080b84235848708864137fe2472 V
IMG 65f8f080b84235848708864137fe2472 V

மடுவில் பிள்ளையார் சிலை ஒரே இரவில் அந்தோனியார் சிலையாக மாறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மடு – பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்திலிருந்த பிள்ளையார் சிலை ஒன்று மாயமாகியுள்ளதுடன், அதே தினத்தில் குறித்த இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. மடு பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்திற்கு அண்மையில் கடந்த 40  வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் மரத்தின் கீழ் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்தது.

அப்பகுதி காட்டுப்பகுதியென்பதால் மதங்கள் கடந்து அப்பகுதியால் செல்பவர்கள் அப்பகுதியில் இருந்த பிள்ளையார் சிலையை வணங்கிவிட்டு செல்வது வழக்கமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்தான் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் சிறிய கோயில் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்த நிலையில் முதல் கட்டமாக மூலஸ்தானம் அமைக்கப்பட்டு அதற்குள் தற்காலிகமாக பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்தது, இந்நிலையில்தான் குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் சிலையை சில விஷமிகள் தூக்கிவிட்டு அந்தோனியார் சிலையை வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் உட்பட எவரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லையென பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.