மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்!

220px நந்தினி
220px நந்தினி

இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தமது 72வது வயதில் திருகோணமலையில் காலமானார்.

கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலை பிறப்பிடமாக அவர் தமது ஆரம்ப கல்வியை மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திரு இருதயக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார்.

இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப சங்க இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட அவர் இலக்கியத்துறை மற்றும் சமூகச் செயற்பாடுகளிலும் முன்நின்று செயற்பட்டவராவார்.

1967 ஆம் ஆண்டும் எழுத்துத் துறையில் தடம்பதித்த அவர் கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக்கட்டுரை ஆகிய துறைகளில் தமது ஆளுமையைச் செலுத்தியுள்ளார்.

அவருடைய பத்தி எழுத்துக்கள் மற்றும் கட்டுரைகள் சில வ.தேவசகாயம், தாவீது கிறிஸ்ரோ ஆகிய பெயர்களிலும் வெளிவந்துள்ளன.

நாவல்கள் குறுநாவல்கள் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் ஆகியவற்றை எழுதியிருந்தாலும் அவை இன்னமும் நூல்வடிவம் பெறவில்லை.

அவரின் சிறுகதைகள் மாத்திரமே இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

இவருடைய படைப்புக்கள் தாயகம், மல்லிகை, வாகை, அலை, புதுசு, இதயம், ஒளி,சிந்தாமணி, வீரகேசரி, தொழிலாளி, சுதந்திரன், ஈழமுரசு, ஈழநாடு ஆகிய சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

வடமாகாண கல்வி அமைச்சு கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கு அவர் செய்த பங்களிப்பு முக்கியமானது.

அத்துடன் அவர் கலாபூசனம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.