காங்சேன்துறை காவல் நிலையத்துக்கு அண்மையாக சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட இளம் குடும்பத்தலைவர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தார். காங்கேசன்துறை காவல் நிலையத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வீதியோரம் சுயநினைவற்ற நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார்.
அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் சேர்த்த போது, உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது. சம்பவ இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் வீதியில் தரித்து நின்றுள்ளது. சம்பவத்தில் நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த ம.ஜெனுசன் (வயது-24) என்ற ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார். சம்பவத்தையடுத்து அங்கு திரண்ட உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
இன்று நண்பகல் இடம்பெற்ற இறுதிக் கிரியை வீடொன்றில் சிலருடன் அவர் முரண்பட்டுக் கொண்டார் என்றும் அவர்களே கொலை செய்துள்ளனர் என்றும் உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு மோப்பநாயுடன் தடயவியல் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். ஆரம்ப விசாரணைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தாக்குதல் நடத்தியமைக்கான தடயங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் விசாரணைகளை காங்கேசன்துறை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.