எல்ல, வெலிவேரிய, தொடங்கொடவில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகொலை!

1527141219 murder L
1527141219 murder L

எல்ல, வெலிவேரிய, தொடங்கொட ஆகிய பிரதேசங்களில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடுவர தோட்டம் மேற்பிரிவு பிரதேசத்தில், இரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நேபியர் தோட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.

கூரிய ஆயுததத்தால் குறித்த நபர் தாக்கப்பட்டார் என்று காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்தது.

இதேவேளை, வெலிவேரிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாதுன்கமுவ பிரதேசத்தில், பெண்ணொருவர் கத்தியால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்று வெலிவேரிய காவல்துறையினர் தெரிவித்தனர். நேதுன்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய பெண்ணே படுகொலை செய்யப்பட்டார்.

இதேவேளை, தொடங்கொட காவல்துறை பிரிவுக்குட்பட்ட கஜுதுவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கோடரியால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கஜுதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயது பெண்ணே படுகொலை செய்யப்பட்டார். குடும்பத் தகராறே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் பெண்ணின் கணவரைப் காவல்துறையினர் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.