தமிழில் தேசிய கீதம் பாடத் தடை: நல்லிணக்கத்தை பாதிக்கும் செயல்

sumanthiran 1
sumanthiran 1

தமிழில் தேசிய கீதம் பாடுவதைத் தடுப்பது தேசிய இனங்களுக்கு இடையேயான ஒப்புரவு, நல்லிணக்கம் என்பவற்றை முறியடிக்கும் அரசின் செயற்பாடாகும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமனற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 ஆம் ஆண்டு நல்லிணக்க அரசாங்கம் ஒன்று கொண்டுவரப்படடதன் பின்னர் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் பல தசாப்தங்களின் பிறகு தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் சார்பாக நானும் எமது கடசியின் தலைவர் சம்பந்தனும் கலந்துகொண்டிருந்தோம். அதற்கு பல காரணங்கள் இருந்தன. நல்லிணக்க சமிக்ஞைகள் பல இருந்தன. தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது. அதுமட்டுமல்லாது, அப்போது ஜானதிபதி மைத்திரிபால தனது உரையில் போர் வெற்றியை கொடூரமான நிகழ்வு என கூறியிருந்தார்.

இவ்வாறு பல நல்லிணக்க சமிக்ஞைகள் தென்பட்டன. அவ்வாறு இருந்த சூழ்நிலை மாறுபட்டு இன்று நல்லிணக்கத்திற்கு மாறான செயற்பாடுகள் இடம்பெற ஆரம்பித்திருக்கின்றன. தமிழில் தேசிய கீதம் பாடப்படமாடடாது என கூறுவது அதில் சிறிய அங்கம் மட்டுமே. அரசாங்கத்தின் போக்கு முற்று முழுதாக மாறியிருக்கின்றது. இது நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடு அல்ல. எனவே நாங்கள் எமது பக்கத்தில் இருந்து சமாதான கைகளை நீட்டுவதற்கான சமிக்ஞைகளை அரசாங்கம் இப்போது கொடுக்கவில்லை.அதற்கு மாறான சமிக்ஞைகளையே கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

தமிழில் தேசிய கீதம் பாடவேண்டாம் என அவர்கள் உத்தரவு கொடுத்தால் அதன் கருத்து தமிழ் மக்கள் தேசிய கீதம் பாட வேண்டாம் என்றே சொல்கிறார்கள். தமிழ் மக்களை தேசிய கீதம் பாட வேண்டாம் என்று சொன்னால் நாங்கள் சந்தோசமாக பாடாமல் விட்டுவிடுவோம். ஏனென்றால் தேசிய வாழ்க்கையில் இருந்து தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு பல தசாப்த காலங்கள் ஆகியிருக்கின்றன. முதலாவது குடியரசு அரசமைப்பு உருவாக்கத்தில் இருந்தே நாம் அதனை சொல்லி வந்திருக்கின்றோம்.

எங்களின் நியாயமான ஜனநாயக கோரிக்கைகள் ஏற்கப்படாமல் இருந்த காரணத்தினாலேயே நாங்கள் தேசிய வாழ்க்கையில் இருந்து விடுபடடவர்களாக எங்களை கணித்திருக்கின்றோம். இதில் இருந்து மாற்றங்கள் ஏற்பட வேண்டுமாக இருந்தால் மிக முக்கியமாக அரசியல் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அப்போதுதான் நாங்கள் சமமான பிரஜைகளாக இந்த நாட்டில் வாழ முடியும். தேசிய வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்கின்ற நிகழ்வின் இன்னொரு அடையாளமே தமிழில் தேசிய கீதம் பாட வேண்டாம் என கூறுவது.

ஆகவே பாடுவதல்ல முக்கியமான விடயம். தமிழ் மக்கள் தேசிய கீதம் பாடுவதையும் தடுக்கின்ற போக்கிலே அரசாங்கம் போய்க் கொண்டிருக்கின்றது. நாங்கள் பாட வேண்டும் என்று வரிந்து போய்க் கேட்கவில்லை. எங்களை பாட வேண்டாம் என்றால் நாம் சந்தோசமாக பாடாமல் இருக்கின்றோம். ஆனால் ஒரு நாட்டுக்குள்ளே இருக்கின்ற தேசிய இனங்களுக்கு இடையே ஒப்புறவு, நல்லிணக்கம் என்பவற்றை முற்றுமுழுதாக முறியடிக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் செய்து வருகின்றது என்பதனை நாம் அரசுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றோம் என தெரிவித்தார்.