உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு தடையுத்தரவு பெற்று சென்ற காவற்துறையினர்

IMG 20210925 WA0022
IMG 20210925 WA0022

தியாக தீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு  முல்லைத்தீவு காவற்துறையினர் முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றம்  ஊடாக  நால்வருக்கு தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாக தீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தவுள்ளார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு காவற்துறையினர் 24.09.2021நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு இலக்கம் எ.ஆர்/724/21இல் வழக்குப் பதிவுசெய்திருந்தனர்.

அதனடிப்படையில் காவற்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நால்வருக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த  தடையுத்தரவில் முல்லைத்தீவுகாவற்துறை பிரிவிற்குள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த இராசையா பார்த்தீபன் என்பவர் தொடர்பில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடாத்தவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென முல்லைத்தீவு காவற்துறையினர் அறிக்கை செய்துள்ளனர்.

எனவே  நீங்களும், உங்கள் ஆதரவாளர்களும் முல்லைத்தீவு காவற்துறை பிரிவிற்குள் 24.09.2021 தொடக்கம் 27.09.2021 வரையான காலப்பகுதிக்குள் இராசையா பார்த்தீபன் தொடர்பிலான எந்தவொரு நினைவு கூரலையும் மேற்கொள்ளக்கூடாதென்ற தடைக்கட்டளையினை குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையின் பிரிவு 106இற்கு அமைவாக பிறப்பிக்கின்றேன். எனக் குறித்த நீதிமன்றத் தடைக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, ஆகியோருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு தடை உத்தரவுகளை காவற்துறையினர்  பெற்றுக் கொண்டுள்ளனர்

இந் நிலையில் குறித்த தடையுத்தரவினை முல்லைத்தீவு காவல் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட வர்கள் 25.09.2021 இன்று, ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் அவர்களுடைய இல்லத்துக்கு எடுத்து சென்று அவருடைய மகன் பீற்றர் இளஞ்செழியனிடம் வழங்கியபோது  இதில் தன்னுடைய பெயர் இல்லை எனவும் பெயர் குறிப்பிடப்பட்டவருக்கு வழங்குவதாக இருந்தால்  முல்லைத்தீவு உண்ணாப்புலவு சேமக்காலையில் கொண்டு சென்று வழங்குமாறும் கூறி காவற்துறையினரை திரும்பி அனுப்பியுள்ளார்