ஊடகவியலாளர்களை அச்சுறுத்த இனியும் இடமளிக்க முடியாது – வவுனியா ஊடக சமூகம்

IMG 20210929 103945 resize 74
IMG 20210929 103945 resize 74

பண்டிவிரிச்சான் பகுதியினை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் மன்னார் ஆயரின் ஆசீர்வாதத்துடனா நடந்தது என்ற சந்தேகம் எழுவதாக வவுனியா ஊடக சமூகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியினை சேர்ந்த ஊடகவியலாளர் ரஞ்சன் ரவிக்குமார் அச்சுறுத்தப்பட்ட விடயம் தொடர்பாக வவுனியாவில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே ஊடக சங்கத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

எமது ஊடக அமைப்புகளில் அங்கத்தவராக உள்ள ரஞ்சன் ரவிக்குமார் பங்குத்தந்தை ஒருவரால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றார். மன்னார் கோவில் மோட்டை பகுதியில் அமைந்துள்ள விவசாய காணிதொடர்பாக அந்தபகுதியை சேர்ந்த விவசாயிகளிற்கும் பண்டிவிரிச்சான் பங்குத்தந்தைக்கும் இடையில் முரண்பாடு ஒன்று அண்மையில் இடம்பெற்றது.

அந்த முரண்பாடு தொடர்சியாக இடம்பெற்றுவந்த சந்தர்ப்பத்தில் அங்கு கடமை நிமித்தம் சென்ற எமது ஊடகவியலாளர் அதனை காணொளியாக பதிவுசெய்து வெளியிட்டிருந்தார். அதனை வெளியிட்டு சிலமணி நேரங்களிலேயே அன்றையதினம் குறித்த ஊடகவியலாளருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட பெரிய பண்டிவிரிச்சான் பங்குத்தந்தை. நாங்கள் உங்களை என்ன செய்கின்றோம் என்றுபாருங்கள் என்று கூறி அவரது உயிருக்கும், தொழிலுக்கும் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

அச்சுறுத்தல் விடுத்த அன்றையதினமே. குறித்த ஊடகவியலாளர் வீட்டில் இல்லாத சமயம் அவரது வீட்டினை சுற்றி இனம் தெரியாத நபர்கள் நடமாடியதுடன் வீட்டின்மீதும் கற்களை எறிந்து தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதன்போது அவரது மனைவியும் குழந்தைகளுமே வீட்டில் இருந்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் மடு காவல்துறை பிரிவில் முறைப்பாட்டினை வழங்கியிருந்தார். எனினும் அதன் பின்னரும் குறித்த ஊடகவியலாளர் மீதான மறைமுகமான அச்சுறுத்தல்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளது.

இதேவேளை நேற்றையதினம் மன்னார் ஆயர் இல்லத்தில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
அங்கு கோவில்மோட்டை காணி விடயம் தொடர்பாக பேசப்பட்ட நிலையில் அந்த சம்பவத்தின் பின்னர் இடம்பெற்ற அச்சுறுத்தல்கள் தொடர்பாகவோ அல்லது ஊடகவியலாளரின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பிலோ எந்தவித கரிசனையும் செலுத்தப்படவில்லை.

ஆகவே இந்தச்சம்பவம் மன்னார் ஆயரது ஆசிர்வாதத்துடன், பங்குத்தந்தையும், மடுபரிபாலகரும் இணைந்து முன்னெடுத்துள்ளதாகவே நாங்கள் கருதுகின்றோம். தங்களது பிழையினை மறைப்பதற்காக ஒருதலைபட்சமாக ஊடகங்கள் செய்தியை வெளியிட்டுள்ளதாக நேற்றைய ஊடகசந்திப்பில் அவர்கள் கூறியுள்ளனர்.

தங்களுக்கு சாதகமான செய்திகளை வெளியிடவேண்டும் என்று நினைப்பதும் ஒரு வகையில் ஊடக அடக்குமுறைதான். இதுவரை போருக்கு பின்னரான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த ஊடகத்துறை சார்ந்த அங்கத்தவர்கள் யாரும் இவ்வாறானதொரு அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை.

ஆனால் ஊடகவியலாளர் அச்சுறுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததுடன், கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்தை நசுக்குவதற்கு ஒப்பானது. குறித்த தரப்புக்களால் எமது ஊடகவியலாளருக்கு எதேனும் ஆபத்துக்கள் ஏற்பட்டால் அதற்கான பின்விளைவுகளை நிச்சயம் சந்திக்கவேண்டிவரும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எனவே குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பங்குத்தந்தையை காவல்துறையினர் அழைத்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் வடகிழக்கை சேர்ந்த ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து நீதிக்கான போராட்டத்தில் குதிப்போம். என்றனர்.