தமிழர்களின் பிரச்சனையை தீர்க்கும்வரை ஜீஎஸ்பி வரிசலுகை வழங்க கூடாது

பொன்னுத்துரை குழைந்தவேல் பண்ணையாளர் சங்க செயலாளர்
பொன்னுத்துரை குழைந்தவேல் பண்ணையாளர் சங்க செயலாளர்

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுடைய காணி அபகரிப்பு காணாமல் போனவர்களின் பிரச்சனை, அரசியல் கைதிகள் விடுதலை, மணல் அகழ்வு மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு தீர்வு வழங்கப்படாமல் ஜீஎஸ்பி  வரிசலுகை இலங்கைக்கு ஜரோப்பிய ஒன்றியம் வழங்க கூடாது என வடக்கு கிழக்கு பாதிக்கப்பட்ட மக்களும் சிவில் அமைப்பும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு கிழக்கு ஊடக மன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்த குழுவினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். 

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் இருந்து அம்பாறை பொத்துவில் வரையிலான பிரதேசங்களில் மணல் அகழ்வு இடம்பெற்றுவருவதுடன் காணாமல்போன எமது உறவுகளுக்கு இதுவரை அரசு தீர்வு பெற்றுதரவில்லை. 

யுத்தம் முடிந்து புனர்வாழ்வு முகாமில் வைத்து இராணுவத்திடம் எமது உறவுகளை கையளித்தோம் அவர்களுக்கு என்ன நடந்துள்ளது தெரியவில்லை அவ்வாறே திருகொணமலை சம்பூரில் காலம்காலமாக நாங்கள் பயிர் மற்றும் வேளாண்மை செய்துவந்த காணிகளை கடற்படையினர் மற்றும் அனல்மின்னிலையத்துக்கு என ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் எமது உறவுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இராணுவத்தை நீதிமன்றில் அடையாளம் காண்பித்தோம் ஆனால் வழக்கையே தள்ளுபடி செய்தனர். தொடர்ந்து சிறைகளில் எமது உறவுகள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். அந்த அரசியல் கைதிகளை இதுவரை விடுதலை செய்யவில்லை.  

மட்டக்களப்பு மயிலத்தனை மடு கால்நடைகளின் மேச்சல் தரையை தற்போது கிழக்கு மாகாண ஆளுநரின் அனுசரணையுடன் சிங்கள மக்கள் ஆக்கிரமிக்கின்றனர். இவ்வாறு தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. எனவே யுததம் முடிந்து சமாதானம் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் எமது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

எனவே எமது மக்களின் அடிப்படை பிரச்சனைளை இந்த அரசாங்கம் தீர்த்து வைக்காத நிலையில் இந்த வரிச்சலுகையான ஜிஎஸ்பி வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்க கூடாது என ஜரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டு கொள்கின்றோம் என தெரிவித்தனர்.