07.10.2021 முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்வாவி காவல்துறையினர் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தீப்பற்றி எரிந்து தீகாயங்களுக்கு உள்ளான ஒரு பிள்ளையின் தாயார் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாயின் கணவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
01.10.21 அன்று காலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 22 அகவையுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தீப்பற்றி எரிந்து தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா மருத்துவமனை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் கடந்த 05.10.21 அன்று இவரின் கணவன் மல்லாவி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 13.10.21 வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த கணவனின் தாயார் கருத்து தெரிவிக்கையில் குடும்ப தகராறில் குறித்த பெண் தனக்கு தானே தீயினை பற்றவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எரிந்த பெண்ணின் தயார் தனது பிள்ளையினை எரித்த கணவனின் செயற்பாடு கணவனின் வன்முறை இதற்கு சரியான தீர்வு கிடைக்கவேண்டும் காவல்துறையில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
தீக்காயங்களுக்கு உள்ளான பெண்ணின் இரண்டரை அகவை பிள்ளை தந்தையின் தாயாரின் அரவணைப்பிலேயே தற்போது உள்ளது. மேலதிக விசாரணைகளை மல்லாவி காவல்துறையினர் ஈடுபட்டுள்ளார்கள்.