மக்களின் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை – வைத்தியர் அர்ஜுன த சில்வா

download 3 3
download 3 3

தனிமைப்படுத்தல் சட்டத்தில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டதன் பின்னர் மக்களின் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இந்த நிலை தொடர்ந்தால் கொரோனா கொத்தணி மீண்டும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது என ராகம வைத்திய பீட சிரேஷ்ட பேராசிரியர் வைத்தியர் அர்ஜுன த சில்வா தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு நாடு திறக்கப்பட்டதற்கு பிறகு மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை. அதனால் மக்கள் முகக்கவசம் அணிவது தொடர்பாக அவதானமாக இருக்கவேண்டும்.

அதேபோன்று ஒன்றாக கூடி இருந்து சாப்பாடு, பானங்களை எடுத்துக்கொள்வது மற்றும் குளிரூட்டப்பட்ட இடங்களை முடிந்தளவு தவிர்ந்து கொண்டு செயற்படுதல் போன்ற சுகாதார பழக்கங்களை தொடர்ந்து பின்பற்றி வரவேண்டும்.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டு நாடு திறக்கப்பட்ட பின்னர் மக்களின் சுகாதார நடவடிக்கைகள் திருப்தியடையும் வகையில் இல்லை.

இந்த நிலை தொடர்ந்தால் கொரோனா கொத்தணி மீண்டும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அதனால் மக்கள் மிகவும் அவதானமாகவும் பொறுப்புடனும் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதேபோன்று 18 முதல் 30 வயது வரையானவர்களுக்கான கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை விரைவாக மேற்கொள்ளவேண்டும்.

அத்துடன் நாட்டை முடக்கியதன் பூரண பெறுபேற்றை இன்னும் இரண்டு வாரங்களுக்கு பின்னரே கண்டுகொள்ள முடியுமாகின்றது.

நாடு முடக்கப்பட்டதன் பெறுபேறாக கொவிட் மரணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்திருக்கின்றதன. அதேபோன்று கொவிட் தொற்று மிகவும் சிறந்த நிலைமைக்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றார்.