அம்பாறை, கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் குடியிருப்பை அண்மித்த பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன் அவற்றை விரட்டும் முயற்சியில் சிறுவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களின் வயல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுமார் 10 – 20 காட்டு யானைகள் குறித்த பகுதிகளில் நடமாடுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்த நிலையில் பொதுமக்களுடன் இணைந்து சிறுவர்களும் காட்டு யானைகளை விரட்டுகின்றனர்.
கல்முனை மாநகர எல்லை பிரிவில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கல்முனை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியிலும் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள பொலிவேரியன் குடியிருப்பு வீட்டு திட்டப் பகுதியை அண்மித்த வயல் வெளியிலும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் மிகுந்த அச்சத்துடன் தாம் வசித்து வருவதாகப் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தமக்கு உதவுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.