மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழக்கூடாது என்பதே இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள பத்மநாபா மன்ற காரியலத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாங்கேணி கிழக்கு பகுதியின் மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லை கிராமமான புனானை காரமுனை பகுதியில் 200 சிங்கள குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 6 ஏக்கர் வீதம் சிங்கள மக்களுக்கு வழங்கி திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கின்றது
இந்த குடியேற்றம் தொடர்பாக கடந்த வருடம் அதற்கு முந்தியவருடம் பல முயற்சிகள் செய்யப்பட்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் கிழக்குமாகாணசபை மக்கள் பிரதிநிதிகள் வாகரை பிரதேசத்திற்குட்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் பல ஆட்சேபனையை தெரிவித்து வந்தோம்.
ஆனால் மீண்டும் மீண்டும் மத்திய அரசாங்கமும் பௌத்த ஆலோசனைக் குழு சிங்கள மக்களை நாங்கள் குடியேற்றி ஆகவேண்டும் என இன்று இதனை கையில் எடுத்திருக்கின்றது என்பது இலங்கை அரசாங்கத்தின் ஒரு கேவலம் கெட்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷவின் தலைமையில் செயற்படும் பௌத்த ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும.
எனவே இந்த திட்டமிட்ட குடியேற்றத்தை வன்மையாக கண்டித்து இன்று இந்த நிலைமையில் அந்த இடத்திற்கு சென்று மக்கள் பிரதிநிதிகள் ஆர்பாட்டம் நடாத்துவது என்பது வரவேற்கதக்க விடையம் இதை உணர்ந்து மத்திய அரசு இதனை நிறுத்துவதற்கான செயற்பாடுகளை செய்யவேண்டும் என அவர் தெரிவித்தார்.