வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அதிகரிக்கும் சமூக விரோத செயற்பாடுகள்; நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

IMG 5749
IMG 5749

வவுனியா பூந்தோட்டம் சந்தி பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சமூகவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பூந்தோட்டம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இன்று (24) காலை இடம்பெற்றது,

குறித்த பகுதியில் ஒன்று கூடும் ஒரு சில இளைஞர்களால் அந்தப்பகுதியை பயன்படுத்தும் பொதுமக்கள் அசௌகரியங்களை சந்திப்பதுடன், மதுபோதையில் நிற்கும் அவர்கள் பெண்களுடன் அநாகரிமான முறையில் நடந்துகொள்வதுடன், தகாத வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்துவதாக பொதுமக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் வவுனியா நகருக்கு தொழிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் பலரிடம் குறித்த நபர்கள் பணத்தினை பறிப்பதாகவும், வியாபார நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களிடம் வம்புச்சண்டை செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

எனவே பூந்தோட்டம் சந்தி பகுதியினை பயன்படுத்தும் பொதுமக்களின் நன்மை கருதி இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு குறித்த கலந்துரையாடலில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அந்தவகையில் முதற்கட்டமாக குறித்த பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பாக வடமாகாண சிரேஸ்ட காவல்துறை மா அதிபர், வன்னிமாவட்ட பிரதிப்காவல்துறை மா அதிபர், மாவட்ட அரசஅதிபர் ஆகியோருக்கு பொதுமக்களின் கையெழுத்து அடங்கிய மகஜர் ஒன்று அனுப்புவதாக தீர்மானிக்கப்பட்டது.

கலந்துரையாடலில் பூந்தோட்டம் வர்த்தகர்கள், பொது அமைப்புக்கள், அயல் கிராமத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.