கனேடியத் தூதரக அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை (25) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
கனேடிய அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் திட்ட மேம்பாடு குறித்து ஆராய்வதற்காகவே கனடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் குழு இன்று யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டது.
தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொம் ப்றவ்ணல் தலைமையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமி, திட்ட ஆலோசகர் ஆகியோரே கனேடியத் தூதரகத்தின் சார்பில் விஜயம் செய்தனர் .
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி கலாநிதி கே. சுதாகர், மொழிபெயர்ப்புகள் கற்றல் துறையின் தலைவர் எஸ். கண்ணதாஸ் ஆகியோரை கனேடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் சந்தித்து திட்ட மேம்பாடு குறித்து கேட்டறிந்தனர்.