இலங்கையில் ஆண்டுதோறும் 60,000 பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்

pa
pa

இன்று உலக பக்கவாத தினமாகும். இம்முறை “ஒரு நொடியும் தாமதியோம், வாழ்க்கையை முடித்துக் கொள்ள மாட்டோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் கூற்றுப்படி, இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 60,000 பக்கவாத நோயாளர்கள் பதிவாகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்படும் மரணங்களுக்குப் பக்கவாதமும் முக்கிய காரணமாகும்.

நாட்டில் இனங்காணப்பட்டுள்ள வருத்தங்களில் பக்கவாதம் 5 ஆவது இடத்தில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் 13.7 மில்லியன் மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 5.5 மில்லியன் பேர் மரணிக்கின்றனர்.

இதயத்திலிருந்து மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பினால் பக்கவாதம் ஏற்படுவதாகவும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய உதவியை நாட வேண்டுமெனவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.