23 தமிழக மீனவர்களையும் யாழ் சிறைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

jaffna prison
jaffna prison

இலங்கை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த  23 தமிழக மீனவர்களையும்  யாழ் சிறைக்கு மாற்ற பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

 நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் இருந்து  கடந்த 11ஆம் திகதி மீன்பிடிக்க இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த வேளை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட  அகத்தியன்,சிவராஜ், சிவசக்தி,சம்பத், முருகன் உள்ளிட்ட 23 மீனவர்களையே இவ்வாறு யாழ் சிறைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 23 மீனவர்கள்  காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைத்திருந்தனர்.
 இதனிடையே நேற்று மீனவர்கள் வழக்கு விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த பருத்துத்துறை நீதிமன்ற நீதிபதி கிஷாந்தன் மீனவர்கள் அனைவரையும்  நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை நீதிமன்ற காவலை நீடித்து  உத்தரவிட்டார்.

இந் நிலையில் கடற்படை தளத்தில் தங்கியுள்ள மீனவர்கள் 23 பேரையும் யாழ் சிறைக்கு மாற்றக் கோரி யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 23  பேரையும் யாழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் இன்று மீனவர் வழக்கில் ஆஜரான யாழ் இந்திய துணை தூதரக அலுவலக வழக்கறிஞர் மீனவர்கள்  23 பேரையும் தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து தமிழகத்தில் உள்ள  மீனவர்களின் உறவினர்களிடம் தொலைபேசி வாயிலாக பேச ஏற்பாடு செய்ய வேண்டும், மீனவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தூதர அதிகாரிகள் வழங்க நீதிபதியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி வரும் 1ஆம் திகதி மீனவர்களை இந்திய துனை தூதரகம் சார்பில்  யார் நேரில் சந்திக்கிறார்கள்  என்ற விபரத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

வரும் 4ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில்  இலங்கை சிறையில் உள்ள தமிழக தமிழக மீனவர்களை இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்வார்காள் என எதிர்பார்த்த நிலையில் மீனவர்களை சிறைக்கு மாற்றியுள்ளது நாகை மாவட்ட மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.