யு.எஸ்.ஏ.ஐ.டி நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன், சி.டி.ஒ நிறுவனத்தின் மேற்பார்வையில், முல்லைத்தீவு மாவட்ட செயலக மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பனை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பயிற்சி மற்றும் அதற்கான வாழ்வாதார உபகரண உதவித்திட்டத்தினை வழங்குவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் காலை 9.00மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த திட்டத்திற்காக இதுவரை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கிலமைந்த பயிற்சிப்பட்டறைகளில் கலந்து கொண்டுள்ளவர்களிலிருந்து நேர்முகத்தேர்வினூடாக 18வயது தொடக்கம் 29வயதுக்குட்பட்ட 37இளைஞர் யுவதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு தையல், மின்னியல், விவசாயம் துறைசார்ந்த பயிற்சிகளுடன் அவைசார்ந்த உபகரணங்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், யு.எஸ்.ஏ.ஐ.டி நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர், கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.