மக்களை திருப்திப்படுத்துவதே நோக்கம் – இராஜாங்க அமைச்சர் விதுர

IMG 5901
IMG 5901

மக்களை திருப்திப்படுத்துவது மற்றும் மக்களை சந்தோசப்படுத்துவது தொடர்பில் நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டும் என தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் கலைஞர்களுடன் இன்று (04) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் சமூகம் பல்வேறு வழிகளிலும் கூறுபட்ட நிலையில் இருக்கின்றது. அதனை கலைகள் ஊடாக ஒன்றிணைக்க முடியும். அதனால் அதனை இனங்கண்டு நாம் முன்னெடுத்துச செல்ல இருக்கின்றோம். கலைகள் மூலமாகவே பிரிந்து போயுள்ள சமூகங்களை ஒன்றிணைக்க முடியும். அதனால் நாட்டின் கலைகள் தொடர்பில் தேசிய ரீதியில் நிலையான கொள்கை வகுக்கப்படும். இந்த மாவட்டத்தின் கலைஞர்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் அவர்களது சிபார்சுகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்துவதுடன், அதனை தீர்த்து வைக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துகின்றோம். 

எமது பாடசாலைப் பிள்ளைகளுக்கும் கலைகள் தொடர்பில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். கலைகளில் ஆர்வம் உள்ள சிறுவர்களை இனங்கண்டுள்ளோம். அவர்களையும் இணைந்துக் கொண்டு நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். களத்தில் கலைஞர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார்கள். அதனை ஆராய்ந்து பட்டியல்படுத்தி எமது அமைச்சுக்கு தர முடியும். மக்களை திருப்திப்படுத்துவது மற்றும் மக்களை சந்தோசப்படுத்துவது தொடர்பில் நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டும். தேர்தல் காலங்களில் மக்களை வீடு வீடாகச் சென்று மதிக்கிறார்கள். தேர்தல் முடிந்த பின் மக்கள் தான் தேர்தலில் வென்றவர்களை தேட வேண்டியுள்ளது. அது தான் நடக்கிறது. அந்த நிலை மாறி மக்களுக்காக பணியாற்ற வேண்டும். 

கலைகளுக்காக பணத்தை ஒதுக்குகின்றோம். அந்த பணம் முடிந்த பின் அவை அவ்வாறே நிற்கின்றன. இதை சரி செய்ய வேண்டும். இதற்கான ஒரு கொள்கை இல்லை. ஒவ்வொரு அரசாங்கமும் மாறும் போது அதில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அமைச்சர்கள், அமைச்சின் அதிகாரிகள் மாறுகிறார்கள். எனவே அரசாங்கம், அமைச்சர், அதிகாரிகள் மாறினாலும் மாறாத வகையில் ஒரு கொள்கை இருக்க வேண்டும். அதனால் தான் நாம் கலை, அழகு என்பவற்றை உள்ளடக்கி தேசிய ரீதியில் ஒரு நிலையான கொள்கையை வகுக்க வேண்டும் என எண்ணியுள்ளோம். அது எவராலும் மாற்றப்படாததாக இருக்க வேண்டும். தேசிய கொள்கைத் திட்டத்தின் ஊடாக கலை, கலாசாரம், அருங்கலைகள், இளம் கலைஞர்கள் ஆகியோரை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். 

நாங்கள் தமிழ், ஹிந்தி படங்களைப் பார்த்தோம். தமிழர்களிடம் பாராம்பரிய கலை பண்பாடுகள் இருந்தன. அதனையும் நாம் பாதுகாக்க வேண்டும்.  நாம் இனம், மதம், மொழி என பல கூறுகளாக வேறுபட்டுள்ளோம். நாங்கள் இவற்றை கலையால் இணைக்க வேண்டும். ஆகவே இருளில் இருந்து பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அந்த இருளை நீக்க ஒளியை ஏற்றுவோம். 

வடக்குக்கான விஜயமாக வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளேன். தொலைபொருட் சின்னங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளோம். அவை பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் கலைஞர்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டுள்ளோம். வடக்கில் கலைஞர்கள் எதிர்நோக்கும் அதே பிரச்சனையைத் தான் தெற்கிலும் கலைஞர்கள் எதிர்நோக்குகிறார்கள். அவற்றில் எந்த மாற்றமில்லை. ஆகையால் கலை தொடர்பில் தேசிய ரீதியில் கொள்கை வகுக்கப்பட்டால் அந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். அதற்கான நடவடிக்கையை எடுத்து நாம் முன்னோக்கி நகர்கின்றோம் எனத் தெரிவித்தார்.