யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அதிசொகுசு பேருந்து திடீரெனத் தீ பற்றி முழுமையாக எரிந்ததுடன் அருகில் நின்ற ஹையஸ் வாகனமும் தீயில் கருகி நாசமாகியுள்ளது.
ஹையஸ் வாகனத்துக்கு அருகில் நின்ற முச்சக்கர வண்டியும் வீட்டின் ஒரு பகுதியும் தீப்பிடித்துச் சேதமடைந்துள்ளன.
இந்த அனர்த்தம் இன்று புதன்கிழமை மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை பரியாரியார் வீதி – கலட்டியில் உள்ள வீடு ஒன்றில் அதிசொகுசு பேருந்து, ஹையஸ் வாகனம், முச்சக்கர வண்டி ஆகியன நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் வாகனங்கள் திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளன.
இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது மூன்று வாகனங்களினதும் உரிமையாளர் குறித்த வீட்டில் நிற்கவில்லை.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.