நாட்டில் இவ்வாண்டு இதுவரையிலும் 22,902 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு நுளம்பு பரவலைக் கண்காணிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோய் பரவல் மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை சடுதியான அதிகரிப்பு நிலையாக மாறுவதைத் தவிர்ப்பதற்காக மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெரிவுசெய்யப்பட்ட 59 அதிக டெங்கு ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன்போது டெங்கு நுளம்பு உருவாகக் கூடிய அபாயமுடைய பிரதேசங்கள் இனங்காணப்பட்டு அதனை சூழவுள்ள மக்களுக்கு ஆலோசனை வழங்கப்படவுள்ளதோடு, நுளம்புகள் உற்பத்தியாகாத சூழலை எவ்வாறு பராமறிப்பது என்பது குறித்தும் பொது மக்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.