மாளிகாவத்தை பெண் கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

Arrested 24 2
Arrested 24 2

சப்புகஸ்கந்த, மாபிம பகுதியில் பயணப்பையிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர் வெல்லம்பிட்டியவில் உள்ள வீடொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் இன்று (10) மஹர நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, மட்டக்குளி – சமித்திபுர பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் நேற்று மஹர நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் கடந்த 4 ஆம் திகதி பயணப்பையில் வீசப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர், உயிரிழந்த பெண் மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்துவந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான மொஹமட் ஷாபி பாத்திமா மும்தாஸ் என்பவர் என அடையாளம் காணப்பட்டிருந்தார்.