’20’ ஆவது திருத்தத்தால் ஜனநாயகம் இல்லாதொழிப்பு என கரு குற்றச்சாட்டு!

Karu Jayasurya
Karu Jayasurya

“இலங்கையில் அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தால் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றமும் தபாலகமாக மாற்றப்பட்டுள்ளது.” இவ்வாறு சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தால் எதிர்ப்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தும்கூட 20ஐ வைத்துக்கொண்டு பொருட்களின் விலையைக்கூட கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைமையே காணப்படுகின்றது. அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவராமல் இருந்திருக்கலாம் என்பதே எனது கருத்து. அதன்மூலம் ஜனநாயகம் இன்று இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

20ஆல் நாடாளுமன்றம் தபாலகம்போல் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமும் முழுமையானது என நான் கூறமாட்டேன்.  எனினும், அதன் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதிக்குரிய பயங்கரமான அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. அரசமைப்பு பேரவை அமைக்கப்பட்டு, உயர் பதவிகளுக்கான நியமனங்கள் உரிய வகையில் இடம்பெற்றன” -என்றார்.