முல்லைத்தீவில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நீதிமன்றால் தடையுத்தரவு!

received 1717413231794283
received 1717413231794283

வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய வருடந்தோறும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி துயிலுமில்லங்களில் தமது உறவுகளுக்கு  அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு ஆண்டு தோறும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு கடந்த 2009 ம்  ஆண்டு முதல் மாவீரர் நாள்  நிகழ்வுகளை அனுஸ்டிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டது.

 இதனை தொடர்ந்து 2018 ம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய அனுமதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிலையில் கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று இந்த அரசாங்கம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது.

இதனிடையே இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனடிப்படையில் முல்லைத்தீவு காவல்துறையினரினால் இன்று மாங்குளம்  நீதிமன்றில் ஏஆர் 868/21 வழக்கினூடாக முல்லைத்தீவு காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது

இதனடிப்படையில் முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த  தடை விதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற  நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இழஞ்செழியன்,சமூக செயற்பாட்டாளர் முத்துராசா சிவநேசராசா(கரன்), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் ,நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன்(முல்லை ஈசன்),சமூக செயற்பாட்டாளர் இசிதோர் அன்ரன் ஜீவராசா, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி ,சமூக செயற்பாட்டாளர் பேதுருப்பிள்ளை ஜெராட் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சமூக செயற்பாட்டாளர்  கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் ஆகிய பன்னிரெண்டு பேர் மற்றும் இவர்களது  குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.