உணவு பொதி ஒன்றின் விலை 20 ரூபாவிலும் தேநீர் 5 ரூபாவாலும் அதிகரிப்பு!

tea
tea

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கமைய உணவு பொருட்களின் விலைகளை அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய உணவு பொதி ஒன்றின் விலை நாளை முதல் 20ரூபாவினால் அதிகரிக்கப்படும் என சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், ஏனைய உணவு பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் அதிகரிப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மற்றும் மரக்கறி  உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக வாழ்க்கை சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொருள் ஏற்றல் மற்றும் இறக்கல் ஆகியவற்றிற்கான கூலியை 15 ரூபாவினால் அதிகரிக்குமாறு வலியுறுத்தி புறக்கோட்டை 5ஆம் குறுக்குத் தெரு நாட்டாமிகள் நேற்று பணிபுறக்கணிப்பில் ஈடுப்பட்டார்கள்.

1989ஆம் ஆண்டு காலம் முதல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளோம் ஒரு முறை பொருள் ஏற்றல் மற்றும் இறக்குமதிக்காக 8 ரூபா தொடக்கம் 10 ரூபாய் மாத்திரமே கிடைக்கப் பெறுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையும்,வாழ்க்கை செலவும் தினசரி அதிகரித்த நிலையில் உள்ளது. அவ்வாறான நிலையில் சேவை கட்டணத்தை அதிகரிப்பது அவசிமாகும் என போராட்டத்தில் ஈடுபட்ட நாட்டாமிகள் குறிப்பிட்டனர்.

மலைநாடு மற்றும் ஏனைய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் வியாபார நடவடிக்கைகளில் தாம் நட்டமடைவதாக மரக்கறி சில்லறை வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மலைநாடு மற்றும் ஏனைய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் சகல மரக்கறிகளின் கிலோகிராமின் சில்லறை விலை 400 ரூபாவை காட்டிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. உரம் பற்றாக்குறை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

உர பிரச்சினை காரணமாக  மரக்கறி விளைச்சல் வீழ்ச்சியடைந்துள்ளதை தொடர்ந்து சந்தையில் கரட் ஒரு கிலோகிராம் 550 ரூபாவிற்கும் லீக்ஸ் 500 ரூபாவிற்கும் போஞ்சி ஒருகிலோகிராம் 600 ரூபாவிற்கும் கத்தரிக்காய் ஒருகிலோகிராம் 400, கறிமிளகாய் ஒருகிலோகிராம் 600 ரூபாவிற்கும் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மரகறிகளின் விற்பனை விலை என்றும் இல்லாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. விலையேற்றத்தின் காரணமாக  250 கிராம் மரகறிகளை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வட்டக்காய்,மரவள்ளி கிழங்கு ஆகியவை மாத்திரம் தான் தற்போது குறைந்த விலைக்கு பெற முடிகிறது. அவற்றையும் மூன்று வேளையும் எவ்வாறு உண்பது என நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.