உண்மையான சூத்திரதாரிகளைக் காப்பாற்ற முயற்சிக்கின்றது அரசு! – சிறில் காமினி ஆண்டகை குற்றச்சாட்டு

siril
siril

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் உண்மையான சூத்திரதாரிகளைப் பாதுகாக்க அரசு முயற்சிக்கின்றது என சிறில் காமினி ஆண்டகை குற்றஞ்சாட்டினார்.

குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் நேற்று மீண்டும் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பந்தமான விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை ஒதுக்கிவைத்து விட்டு, விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பும் நபர்களை அரசு பின் தொடர்ந்து வருகின்றது.

விசாரணைகளை ஒதுக்கி வைத்து விட்டு கேள்வி எழுப்பும் நபர்களைப் பின் தொடர்வதன் ஊடாக விசாரணைகளை மூடி மறைக்கும் முயற்சி மாத்திரமல்லாது, ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் உண்மையான சூத்திரதாரிகளைப் பாதுகாக்க அரசு முயற்சிக்கின்றது.

இதனடிப்படையில், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் தற்போதைய அரசுடன் சம்பந்தப்பட்ட நபர்களும் இருக்கின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சந்தேகம் எவருக்கும் எழக்கூடியது.

இப்படியான சந்தேகங்கள் ஏற்படுவதைப் பயமுறுத்தல்கள் மூலமோ, அச்சுறுத்தல்கள் மூலமோ நிறுத்திவிட முடியாது. அவ்வாறான சந்தேகம் ஏற்படுவதைத் தவிர்க்க நியாயமான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளுக்குத்  தண்டனை வழங்க வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிறைவேற்றுவதற்காக கத்தோலிக்கத் திருச்சபை எடுக்கும் முயற்சிகளை எந்தவகையிலும் நிறுத்தப் போவதில்லை.

பயமுறுத்தல் அல்லது அச்சுறுத்தல்கள் மூலம் நீதியைத் தேடும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும் என அரசின் பிரதானிகள் நினைத்தால் அது மிகப் பெரிய கேலி.

முன்னாள் சட்டமா அதிபர் கூட ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் மிகப் பெரிய சூழ்ச்சி இருக்கின்றது எனக் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதை நம்ப நேரிடும்” – என்றார்.