தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் என்ற பெயரில் ‘மலர் முற்றம்’ என்ற காட்சித் திடலை சனிக்கிழமை (20.11.2021) திறந்து வைத்துள்ளது. இம்மலர் முற்றத்தை இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.
![B](https://thamilkural.net/wp-content/uploads/2021/11/B-1024x683.jpg)
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில்; கார்த்திகைப் பூச்சூடி ஆரம்பமான இத்திறப்பு நிகழ்ச்சியில் அவுஸ்திரேலிய இன்பத்தமிழ் வானொலியின் அனுசரணையுடன் ‘நடிகர் விவேக்கின் நற்பணியில் நாமும் நடுவோம் ஒரு மரம்’ என்ற திட்டத்தின் கீழ் இலவசமாக மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.
![K](https://thamilkural.net/wp-content/uploads/2021/11/K-1024x683.jpg)
இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்கள் மரக்கன்றுகளை வழங்கி வைத்துள்ளார்.
வடக்கு மாகாணசபை 2014ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியிருந்தது. இதைக் கடைப்பிடிக்கும் முகமாக இம்மாதத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் பெரிய அளவில் மரநடுகையை மேற்கொள்வதோடு பொதுமக்களுக்கும் பொது அமைப்புகளுக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கியும் வருகிறது.
![E](https://thamilkural.net/wp-content/uploads/2021/11/E-1024x683.jpg)
இக்காலப்பகுதியில் உள்ளூர் தாவர உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் மலர்ச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் ‘மலர் முற்றம்’ என்ற காட்சித் திடலையும் நல்லூர் கிட்டு பூங்காவில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகிறது.
![C](https://thamilkural.net/wp-content/uploads/2021/11/C-1024x683.jpg)
இந்த ஆண்டு கொரோனாப் பேரிடர் காரணமாக மிகவும் எளிமையாகவே நடைபெற்ற மலர் முற்றத் திறப்பு நிகழ்ச்சியில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இம்மாதம் 26ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணியில் இருந்து முன்னிரவு 7.00 மணிவரை இம் மலர் முற்றம் திறந்திருக்கும் எனவும், இதனை பார்வையிட வரும் மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்படும் எனவும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தெரிவித்துள்ளது.