முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 21 பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் காவல்துறையினர் கடந்த 17.11.2021 அன்று நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனடிப்படையில் மாங்குளம் நீதிமன்றில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,முள்ளியவளை, மல்லாவி, ஜயன்கன்குளம், மாங்குளம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் ஆகிய ஏழு காவல்துறையினர் நிலையங்களை சேர்ந்த காவல்துறையினரினால் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தடையுத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (23) மீண்டும் 21 பேருக்கு காவல்துறையினர் நீதிமன்றில் தடையுத்தரவுகளை பெற்றுள்ளனர். அதனடிப்படையில் முல்லைத்தீவு காவல்துறையினரினால் ஏற்கனவே 12 பேருக்கான தடையுத்தரவினை பெற்றுக்கொண்ட நிலையில் மேலும் 12 பேருக்கு தடையுத்தரவினை கோரியதன் அடிப்படையில் மொத்தமாக 24 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தடையுத்தரவு பிறப்பித்திருந்தார்.
1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை கோவையின் பிரிவு 106(1)இன் கீழான(மேலதிக) தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சமூக செயற்பாட்டாளர்களான மத்யூ யூட் சுரேஸ், கந்தையா உதயகுமார், விஜயகுமார் நவநீதன், நகுலேந்திரன் சுரேஸ்குமார், சத்தியமூர்த்தி சத்தியரூபன், தம்பையா யோகநாதன், தணிகைசீலன் ஸ்ரரீபன், இராசையா தீபன்,மு. தவலோகேஸ்வரன், கிருஸ்ணபிள்ளை சிவலிங்கம், இளங்கேஸ்வரன் கனகாம்பிகை, சிவராசா செந்தூர்செல்வம் அல்லது கிளியன் ஆகிய 12 பேருக்குமே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் ஊடாக ஏற்கனவே 14 பேருக்கான தடை உத்தரவுகளை பெற்றிருந்த நிலையில் மேலும் 09 பேருக்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 23 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை கோவையின் பிரிவு 106(1)இன் கீழான (மேலதிக) தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சமூக செயற்பாட்டாளர்களான சிவஞானம் சிவரூபன், காளிமுத்து பன்னீர்ராசன்(வாசன்), செல்வகுமார் செல்வச்சந்திரன், ஜோசப் சுதர்சன், அன்ரன் ஜீவராசா, தர்மலிங்கம் நவநீதன், விஜயரத்தினம் தனுஸ் (புலிக்குட்டி), நாகராசா ரதேஸ், தேவராசா ஜெயச்சந்திரன்(நந்தன்) ஆகிய ஒன்பது பேருக்குமே குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 68 பேருக்கான தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை (25) குறித்த வழக்குகள் ஊடாக விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவுகளை நீக்க கோரி தடையுத்தரவு விதிக்கப்பட்டவர்கள் சார்பாக சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆயராகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.