முல்லைத்தீவில் மாவீரர் நாளுக்கு தடையுத்தரவு கோரிய விண்ணப்பம் நிராகரிப்பு!

IMG 0238
IMG 0238

முல்லைத்தீவில் மாவீரர் நாளுக்கு தடையுத்தரவு கோரி மீண்டும் காவல்துறையினர் செய்த விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.  

இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும் இறந்தவர்கள் அவர் யாராக இருந்தாலும் அவரை நினைவு கூறுவது மானிடப்பண்பு என்று குறிப்பிட்டு நேற்றையதினம்(25) ஏற்கனவே 17 ம் மற்றும் 23 ம் திகதிகளில் வழங்கிய மாவீரர் நிகழ்வு கொண்டாடுவதற்கு எதிரான  கட்டளையை  இறந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்பதாக திருத்தியமைத்து கட்டளையாக்கியிருந்தார்  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா  அவர்கள்

இந்நிலையில் இன்று(26) மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு காவல் நிலைய காவல்துறையினரினாலும் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து குறித்த நினைவுகூரலுக்கான தடையுத்தரவை வழங்குமாறு மீண்டும் விண்ணப்பம் செய்தனர்.  குறித்த வழக்கு விசாரணைகள் இன்று (26) மீண்டும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுக்கப்பட்டபோது காவல்துறையினர் தடையுத்தரவை வழங்குமாறு பல்வேறு சமர்ப்பனங்களை முன்வைத்திருந்தார் இதன்போது  தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான க.கணேஸ்வரன், ருஜிக்கா நித்தியானந்தராசா, எஸ் மதுரா ஆகிய  சட்டத்தரணிகள் குறித்த வழக்கில் ஆஜராகி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றுக்கு எடுத்துரைத்தனர்.

இரண்டு தரப்பு நியாயங்களையும் செவிமடுத்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா  அவர்கள் காவல்துறையினரின் விண்ணப்பத்தை நிராகரித்து ஏற்கனவே நேற்றயதினம் (25) வழங்கிய கட்டளையை வழங்கினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட எழுபத்திரண்டு பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, முள்ளியவளை ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி ஐயன்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய ஏழு காவல் நிலையங்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த எழுபத்திரண்டு பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான தடை உத்தரவை நீக்கக்கோரி நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு விசாரணைகள்  முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நேற்று (25) இடம்பெற்றது.

இதனடிப்படையில் குறித்த திருத்திய கட்டளையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.