உலகளாவிய ரீதியில் பொருளாதாரச் சவால்களை வெற்றிகொண்டு நாட்டை முன்னேற்றுவதற்காக, எதிர்காலங்களில் பல்வேறு தீர்மானங்களை எடுக்க வேண்டி இருக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்தகைய தீர்மானங்கள் விமர்சனங்களுக்கு உள்ளானாலும், எதிர் காலங்களில் அதன் பிரதிபலன்கள் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்குமென்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(26) இடம்பெற்ற ‘ஜனாதிபதி ஏற்றுமதி விருது’ விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறுகியகால சிக்கல்களை வெற்றிகொண்டதன் பின்னர் பொருளாதார நிவாரணங்களை வழங்க முடிவதோடு, நாட்டைப்பற்றி சிந்தித்து புரிந்துணர்வுடன் செயற்படுமாறு தாம் அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய உயர் மற்றும் தனித்துவமான விருது இதுவாகும்.
ஏற்றுமதித் துறையின் வளர்ச்சிக்காக உயரிய பங்களிப்பை வழங்கிய ஏற்றுமதியாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.