இரட்டைவாய்க்கால் -சாலை வீதியினை புனரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

salai iraddaivaaikal road issu 7
salai iraddaivaaikal road issu 7

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான இரட்டைவாய்க்கால் சந்தியில் இருந்து சாலை வரையான பதின்மூன்று கிலோமீற்றர் வீதியினை புனரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான இரட்டைவாய்க்கால் சந்தியில் இருந்து சாலை வரையான பதின்மூன்று கிலோமீற்றர் வீதியானது மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமையால்  குறித்த வீதியினை பயன்படுத்தும் பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள், பாடசாலை மாணவர்கள் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குறித்த வீதியினை மிக விரைவில் புனரமைத்து தருமாறு பொதுமக்கள் கோருகின்றனர்.

குறிப்பாக மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் சுமார் 400 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மாத்திரமின்றி குறித்த வீதியை பயன்படுத்தி விவசாய மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்லும் பலரும் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக குறித்த வீதி புனரமைக்கப்படாமையால் குறித்த வீதியால் பேருந்து சேவைகள் இடம் பெறுவதில்லை. இதனால் தமது நிர்வாக நடவடிக்கைகள் அனைத்துக்கும் முல்லைத்தீவு நகருக்கு செல்லவேண்டிய குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த வீதி பாரிய குன்றும் குழியுமாக காணப்படுவதோடு மழைக்காலங்களில் வீதி பாவிக்கமுடியாத அளவுக்கு நீர் நிரம்பி தடைப்படுவதும் வழமையாகியுள்ளது. நிர்வாக நடவடிக்கைகள் அனைத்துக்கும் முல்லைத்தீவுக்கு குறித்த வீதியூடாக செல்லவேண்டிய மக்கள் சுமார் இருப்பது கிலோமீற்றர் சுற்றி புதுக்குடியிருப்பு ஊடாக செல்லுகின்ற நிலை காணப்படுகின்றது.

யுத்தத்துக்கு முன்னரும் சரி யுத்தத்துக்கு பின்னரும் சரி இந்தவீதியூடாக பயணிக்கமுடியாதநிலை காணப்படுகிறது. இந்த வீதிதொடர்பில் பல ஆண்டுகளாக குரல்கொடுத்தும் தமக்கு எந்தவிதமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை. எனவும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் மீனவர்கள் தமது செயற்பாடுகளை செவ்வனே செய்ய குறித்த வீதியினை மிக விரைவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கரிக்கட்டுமூலை வடக்கு வடடார உறுப்பினர் இ.கஜிதரன் கோருகிறார்.

இதேவேளை குறித்த வீதி தொடர்பில் கருத்து தெரிவித்த வலைஞர்மடம் கமக்கார அமைப்பின் தலைவர் ஜோசெப் -செபமாலை அவர்கள் குறித்த இந்த வீதியானது மிக நீண்டகாலமாக திருத்தப்படாத நிலையில் காணப்படுகிறது. நோயாளர்கள் பாடசாலை மாணவர்கள் விவசாயிகள் என பலரும் பாதிக்கப்படுகிறோம்.

வைத்தியசாலை செல்லும் நோயாளர்கள் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர். பாடசாலை மாணவர்கள் பாடசாலை செல்ல முடியாமல் வீதியில் நீர் நிப்பதால் பாடசாலை செல்லாமல் திரும்பி வந்திருக்கிறார்கள். இவ்வாறு விவசாயிகள் விவசாய உள்ளீடுகளை கொண்டுசெல்லமுடியாமல் தத்தளிக்கிறார்கள் மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைக்கு செல்ல அவர்களுக்கு தேவையான அல்லது அவர்களிடம் உள்ள கடலுணவுகளை விற்பனைக்கு கொண்டுசெல்ல முடியாது தத்தளிக்கின்றனர்.

குறிப்பாக கடல் சீற்றம் போன்ற ஏதேனும் ஆபத்து வந்தால் வெளியேற கூடமுடியாத அளவில் வீதியில் நீர் தேங்கி தடைப்படுகிறது. ஆகவே மிக விரைவில் குறித்த வீதியினை புனரமைத்து தருமாறு உரியதரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.