பாடசாலையில் உளவியல் கருத்தரங்கு நடத்திய ஆலோசகர் உட்பட 4 பேர் துப்பாக்கி, தோட்டாக்களுடன் கைது!

kaithu
kaithu

பதுளை – ஹாலிஎல பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் மாணவர்களுக்கான உளவியல் கருத்தரங்கை நடத்துவதற்காக சென்றிருந்த ஆலோசகர் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் மூவர், துப்பாக்கி மற்றும் 129 தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கறுப்பு நிற ஆடை அணிந்திருந்த இவர்கள் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக ஹாலிஎல காவல்துறையினருக்கு நேற்று(2) தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பின்னர் காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று அப்பாடசாலைக்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டதில், குறித்த வேலைத்திட்டத்திற்கு, மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்லது வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதி பெறப்படவில்லையெனத் தெரியவந்துள்ளது.

பாடசாலைக்கு ஆலோசகராக வந்திருந்த நபர், எந்தவொரு நிறுவனத்தின் கீழும், இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த பதிவுகளை மேற்கொண்டிராத, துறைசார் தகைமைகள் அற்றவர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது