யாழ். தீவக சூாிய சக்தி மின்நிலைய திட்டத்தை இடைநிறுத்தியது சீனா!

Sri Lanka vs China 720x375 1
Sri Lanka vs China 720x375 1

யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் வேலைத் திட்டத்தைச் சீனா இடைநிறுத்தியுள்ளது.

இலங்கையில் உள்ள சீன தூதரகம் தனது ட்விட்டர் தளத்தில் இந்தத் தகவலைப் பதிவு செய்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் சம்பந்தமாக மூன்றாம் தரப்பு ஒன்றிலிருந்து எழுந்துள்ள பாதுகாப்பு கரிசனை கருதி இந்த வேலைத் திட்டம் இடைநிறுத்தப்படுவதாக அந்த ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இதே மாதிரியான 12 தீவுகளில் கலப்பு மின்னுற்பத்தி மையங்களை அமைக்கும் வேலைத் திட்டம் ஒன்றுக்காக மாலைதீவு அரசாங்கத்துடன் கடந்த 29ஆம் திகதி சீனாவின் நிறுவனம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களில் இந்தச் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தைச் சீனா முன்னெடுக்கவிருந்தது.

இதற்கான அமைச்சரவை அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக இந்தியா தனது கரிசனையை வெளியிட்டுள்ளதுடன் தமிழ் அரசியல் கட்சிகளும் இதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தின.

இந்த நிலையில் தற்போது இந்த வேலைத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.