சமையல் எரிவாயு மற்றும் அதன் பாகங்களின் தரம் தொடர்பிலான பரிசோதனைகளை, எதிர்காலத்தில் இலங்கை தரநிர்ணய நிறுவகத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று(03) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை இறக்குமதி கட்டுப்பாட்டாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள இன்னல்கள் காரணமாக நாடு பூராகவும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் எதில் மெகப்டன் (Ethyl Mercaptan) பதார்த்தம், கொள்கலனில் 14 அலகுகளாக இருக்கவேண்டிய நிலையில், அது தற்போது 5 அலகுகளாக உள்ளதன் காரணமாக, எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனை என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சமையல் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் காரணமாக, பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
குறிப்பாக நாளாந்தம் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவோர், உணவக மற்றும் சிற்றுணவக உரிமையாளர்கள் இவ்வாறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.