மட்டக்களப்பு இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் உதயரூபனை பாடசாலையில் இருந்து இடம்மாற்றுமாறு கோரி மட்டக்களப்பு சிவானந்தா தேசிய ஆண்கள் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் இன்று திங்கட்கிழமை (06) பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
குறித்த பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி வரும் மட்டக்களப்பு இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் உதயரூபன் தொழிற்சங்கம் என்ற போர்வையில் பாடசாலையில் மாணவர்களுக்கு கற்பிப்பதில்லை உட்பட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை இடமாற்றுமாறு கோரி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து பாடசாலைக்கு முன்னால் இன்று காலை 7 மணிக்கு பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மற்றும் மட்டு மாநகரசபை மேஜர் ரி. சரவணபவான் மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு வேண்டாம் வேண்டாம் உதயரூபன் வேண்டாம், ஆசிரியர் ஸ்தானத்துக்கு தகுதியற்ற உதயரூபனை வெளியேற்று, வலயக் கல்வி பணிப்பாளரே உதயரூபனின் அடாவடித்தனத்தை நிறுத்து, படுவான்கரை மைந்தன், முல்லைமகன், கல்லடி ஆசான் போன்ற போலி முகநூலின் சூத்திரதாரியை வெளியேற்றுங்கள்,
கல்விகற்பிக்காத உதயரூபன் வேண்டாம், மாகாண கல்வி பணிப்பாளரே உடன் நடவடிக்கை எடுங்கள், எமது பாடசாலைக்கு உதயரூபன் வேண்டவே வேண்டாம், தொழிற்சங்கம் என்ற பேர்வையில் சர்வதிகாரம் செய்துவரும் உதயரூபன் வேண்டாம் போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்காரர்கள் உதவி கல்வி பணிப்பாளர் ரவிச்சந்திராவிடம் மகஜர் ஒன்றை கையளித்த பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.