விவசாயத்துறை அமைச்சின் பொறுப்புக்கள் இராணுவத்திற்கு பொறுப்பாக்கப்படவில்லை – மஹிந்தானந்த

Mahindananda Aluthgamage 02
Mahindananda Aluthgamage 02

அரசாங்கத்தின் சிறந்த திட்டங்கள் ஊடகங்களில் தவறான முறையில் சித்தரிக்கப்படுகின்றன. விவசாயத்துறை அமைச்சின் பொறுப்புக்கள் இராணுவத்திற்கு பொறுப்பாக்கப்படவில்லை.

நாட்டில் ஒருபோதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பொய்யான வாக்குறுதிகள் குறித்து கருத்துரைக்க விரும்பவில்லை.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் பொதுஜன பெரமுன நிச்சயம் பெற்றிப்பெறும். சஜித், சம்பிக்க, ரணில், அநுர மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விவசாயத்துறை அமைச்சின் செயற்பாடுகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுவது முற்றிலும் பொய்யானது. கொவிட் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

இராணுவத்தினரது உதவியில்லாமல் கொவிட் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். தடுப்பூசி செலுத்தல் திட்டத்தை இராணுவத்தினர் நேர்த்தியான முறையில் முன்னெடுத்துள்ளார்கள்.

இலங்கையை பசுமை நாடாக உருவாக்குவதற்கு தேவையான முக்கிய விடயங்கள்  அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை முறையானதாகவும், நிலையானதாகவும், செயற்படுத்துவதற்கு ‘பசுமை விவசாய செயற்பாட்டு மையம்’ ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் வழிகாட்டலின் கீழ் பசுமை விவசாய செயற்பாட்டு மையம் செயற்படுத்தப்படவுள்ளது. அரசாங்கத்தின் சிறந்த திட்டங்கள் ஊடகங்களில் தவறான முறையில் சித்தரிக்கப்படுகின்றன.
சேதனபசளை திட்டத்தை பலவீனப்படுத்த திட்டமிட்ட வகையில் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகின்றன. இரசாயன உரம் தடை செய்யப்பட்டபோது மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டது.

இரசாயன உரம் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து மரக்கறிகளின் விலை சடுதியாக குறைவடைந்தது. சேதன பசளை திட்டத்திற்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் இரசாயன உர பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் எவரும் கருத்துரைப்பதில்லை.

எதிர்வரும் காலங்களில் நாட்டில் பெரும் உணவு தட்டுபாடு ஏற்படும் என எதிர்தரப்பினரும், ஆளும் தரப்பின் ஒருசில உறுப்பினர்களும் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். எக்காரணிகளுக்காகவும் உணவு தட்டுப்பாடு ஏற்படாது. பெரும்போக விவசாயம் நிச்சயம் வெற்றிப் பெறும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பொய்யான வாக்குறுதிகள் பற்றி குறிப்பிட விரும்பவில்லை.

அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.