அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு கீழ் இயங்கும் 12 தோட்டங்களின் 42 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று(13) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட 1,000 ரூபா சம்பளம் பாரிய பிரச்சினையாக இருப்பதாகவும், தற்போது தேயிலை மலைகள் காடாகி கிடப்பதால் 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
அத்தோடு, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களே வேலை வழங்குவதால் பெரும் சிரமத்திற்கு மத்தியில் நிம்மதியற்று வாழ்ந்து வருவதாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள், தங்களுக்கு சாதகமான பதிலைப் பெற்றுத்தர வேண்டும் எனக் கோரியும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்திற்கு, கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.