யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்கள் இன்று மீண்டும் பரிசீலனை!

0a1c1610 6d1e73b1 yuhadanavi 850x460 acf cropped
0a1c1610 6d1e73b1 yuhadanavi 850x460 acf cropped

கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனை இரண்டாவது நாளாகவும் இன்று காலை 10 மணிக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவன்ச தேரர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க மற்றும் இலங்கை மின்சார தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஞ்சன் ஜயலால் பெரேரா ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் 27 பேர், இலங்கை மின்சார சபை, வெஸ்ட் கோஸ்ட் பவர் தனியார் நிறுவனம், லக்தனவி நிறுவனம், இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், கொள்வனவு செய்யும் அமெரிக்க நிறுவனம், நிதி,மின்சார, வலு சக்தி அமைச்சுக்களின் செயலர்கள், அமைச்சரவையின் செயலர் உள்ளிட்ட 43 தரப்பினர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.