சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுகிறது?

SAPUGASKANDA
SAPUGASKANDA

இறக்குமதி செய்யப்பட்டுள்ள மசகு எண்ணெய் நாட்டை வந்தடைவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடுவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 7 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், மசகு எண்ணெய் தாங்கிய கப்பலின் தாமதம் காரணமாக எதிர்வரும் ஜனவரி முதலாவது வாரம் தொடக்கம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், செய்திச் சேவை ஒன்று இலங்கை எரிப்பொருள் கூட்டுத்தாபனத்திடம் வினவிய போது, அதன் பேச்சாளர் ஒருவர், மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லையென அவர் தெரிவித்தார்.