எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இன்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
உரிய தரத்துடன் கூடிய எரிவாயுவை விநியோகிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நீண்டகால மற்றும் குறுகிய கால யோசனைகள், எரிவாயு வெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினால் முன்வைக்கப்படும் என அதன் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்தமையை அடுத்து, இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கடந்த நவம்பர் 30ஆம் திகதி ஜனாதிபதியினால் நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.
மொரட்டுவை பல்கலைகழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பலகே தலைமையில் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னாக்கோன், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டி அல்விஸ் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் பேராசிரியர் டப்ளியூ. டீ. டப்ளியூ. ஜயதிலக ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த குழுவினால், எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவான இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் எரிவாயு நிறுவனங்கள் மற்றும் அதன் களஞ்சியசாலைகள் உள்ளிட்ட இடங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.