முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான சேதன பசளை உற்பத்தி தொடர்பிலான விவசாய திணைக்களம் மற்றம் மாவட்டசெயலக அதிகாரிகள்,கமநலசேவை நிலைய அதிகாரிகள் பிரதிமாகாண விவசாய பணிப்பாளர் மற்றும் படைத்துறை அதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்று 20.12.21 அன்று கேப்பாபிலவுவில் உள்ள 59 ஆவது படைத்தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தற்போதைய அரசாங்கத்தின் பசுமை விவசாயத்தினை ஊக்கிவிக்கும் நோக்குடன் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பசுமை விவசாயத்தினை முல்லைத்தீவு மாவட்டத்தில் விருத்தி செய்யும் நோக்கில் கமநலசேவை நிலையங்கள் மற்றும் விவசாய திணைக்களங்கள்,மாவட்ட செயலகம் ஊடாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த முயற்சியில் படையினரின் பங்கும் பெரும் முக்கியமாக காணப்படுகின்றது. அவர்கள் தங்கள் முகாம்களில் சேதன பசளை செய்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள் கிராமங்களில் விசாயிகளும் உற்பத்தி செய்து வருகின்றார்கள்.
தனிப்பட்டவர்களும் சிறிய மற்றம் நடுத்தர அளவிலான பசளை உற்பத்தியினை மேற்கொண்டு வருகின்றார்கள் தனியார்கள் சேதன பசளை உற்பத்திற்காக பாரியளவிலான முயற்சியினை மேற்கொண்டுள்ளார்கள். அதற்கான நிலத்தினையும் கோரியுள்ளார்கள் மாந்தை கிழக்கில் தனியார் ஒருவர் 49 ஏக்கர் நிலத்தினை சேதன வளமாக்கிகளை உற்பத்தி செய்வதற்காக கோரியுள்ளார்கள்.
இந்த அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளிப்பதற்கு தனியார்கள் முன்வந்து சேதனை உற்பத்தியினை மேற்கொள்ளும் போது மாவட்டத்திற்கு தேவையான உரத்தினை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட விவசாய பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அண்ணளவாக 25ஆயிரம் மெற்றிக்தொன் கூட்டெரு தேவையாக உள்ளது இவற்றை உற்பத்தி செய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் போதியதாக இல்லை குறைந்தளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது அதனை பாரியளவில் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக படையினரின் ஏற்பாட்டில் சந்தித்து கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.