நுவரெலியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச வைத்தியர்கள் இன்று (21) காலை முதல் பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து (20) நேற்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சினால் எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் இன்றைய தினமும் போராட்டத்தில் ஈடுப்படுவதாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.
நுவாரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினமும் அவசர சிகிச்சை பிரிவை தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தூர இடங்களில் இருந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்த வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணிகள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.