எரிபொருள் விலைகளை அதிகரித்த அரசாங்கத்தின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது – மயந்த திஸாநாயக்க

screenshot2327 1639934581 2
screenshot2327 1639934581 2

உலகசந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 4 சதவீதத்தினால் குறைவடைந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், மங்கள சமரவீரவினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் அமுலில் இருந்திருந்தால் நாட்டில் எரிபொருள் விலைகள் குறைவடைந்திருக்கும்.

ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக ஏற்கனவே அதிகரித்த வாழ்க்கைச்செலவினால் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களின் சுமையை மேலும் மிகைப்படுத்தும் வகையில் அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரித்திருப்பதானது கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி அமைச்சர் உதய கம்மன்பில நைஜீரிய தூதுவரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். நைஜீரியாவுடன் ஏதேனும் இரகசிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளனவா? நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றதா? அதனைக் கையாள்வதற்கு நைஜீரியாவின் உதவியை நாடும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டதா? என்பன உள்ளடங்கலாக இச்சந்திப்பின் நோக்கம் தொடர்பான விபரங்கள் நாட்டுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

எரிபொருள் விலைகளை அதிகரிக்கமாட்டோம் என்று வாக்குறுதியளித்த அரசாங்கம், நேற்று முன்தினம் இரவோடு இரவாக அவற்றின் விலைகளை அதிகரித்திருக்கின்றது. அதன்படி ஒரு லீற்றர் 92 ஒக்டெய்ன் பெற்றோலின் விலை 20 ரூபாவாலும் 95 ஒக்டெய்ன் பெற்றோலின் விலை 23 ரூபாவாலும் டீசலின் விலை 10 ரூபாவாலும் சுபர் டீசலின் விலை 15 ரூபாவாலும் மண்ணெண்ணெயின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையதிகரிப்பு தொடர்பான கோரிக்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலினால் முன்வைக்கப்பட்டிருப்பதுடன் அரசாங்கத்தின் செலவுகளைக் குறைத்தல், மக்களின் வாகனப்பயன்பாட்டை மட்டுப்படுத்துதல், டொலர் நெருக்கடியைக் கையாளுதல் ஆகியன அதற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதேவேளை நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றபோதிலும், எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளமை குறித்து அதில் கலந்துகொண்ட அமைச்சர்கள் அறிந்திருக்கவில்லை.

உலகசந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நூற்றுக்கு 4 சதவீதத்தினால் குறைவடைந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், மங்கள சமரவீரவினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் அமுலில் இருந்திருந்தால் இப்போது எரிபொருள் விலைகள் குறைவடைந்திருக்கும்.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் முட்டாள்தனமான தீர்மானங்களின் விளைவாக எரிபொருள் உள்ளடங்கலாக அத்தியாவசியப்பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தமுடியாத நிலையேற்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்துடன் அத்தியாவசியப்பொருட்களின் விலைகள், எரிவாயு சிலிண்டர் விலை, பஸ் கட்டணம் உள்ளிட்ட அனைத்திலும் அதிகரிப்பு ஏற்படும். இவற்றால் உயர்வடைந்துவரும் வாழ்க்கைச்செலவைத் தாங்கிக்கொள்ளமுடியாத நிலையில் மக்கள் இருக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் நிர்வாகத்தை உரியவாறு முன்னெடுத்துச்செல்லமுடியாத நிலையிலுள்ள அரசாங்கம், அந்தப் பொறுப்பை எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான எமது தரப்பினரிடம் கையளித்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

நாம் ஆட்சிபீடமேறும் பட்சத்தில் நாட்டின் நிர்வாகத்தை எவ்வாறு முன்னெடுத்துச்செல்வோம் என்பதைக் காண்பிக்கும் வகையில், ஒவ்வொரு துறைகள் தொடர்பான எமது கொள்கைத்திட்டத்தை வெளியிட்டு வருகின்றோம்.

நாம் தேர்தலை முன்னிறுத்தி இவற்றைச் செய்யவில்லை. மாறாக நாட்டுமக்களின் நலனை உறுதிப்படுத்துவது மாத்திரமே எமது இலக்காகும்.

அடுத்ததாக எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுடன் அதுபற்றி கலந்துரையாடப்படவுமில்லை.

நாடாளுமன்றக்கூட்டத்தொடர் பிற்போடப்பட்டிருப்பதன் காரணமாக அதுவரையில் இவ்வறிக்கையை நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்க முடியாது.

எனவே நாட்டில் என்ன நிகழ்கின்றது என்பது குறித்து அமைச்சரவையோ அல்லது நாடாளுமன்றமோ அறியாத நிலையே தற்போது காணப்படுகின்றது.

மேலும் உலகளாவிய ரீதியில் ஒமிக்ரோன் வைரஸ் தீவிரமாகப் பரவிவருகின்றது. கடந்த காலங்களில் டெல்டா வைரஸ் பரவல் குறித்து நாம் முன்கூட்டியே எச்சரித்தபோதிலும், அரசாங்கம் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் காரணமாக நாடளாவிய ரீதியில் டெல்டா வைரஸ் பரவல் தீவிரமடைந்தது.

ஆகவே அதனைப்போன்று அசமந்தமாக செயற்படாமல், ஒமிக்ரோன் வைரஸ் பரவல் நாட்டில் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.