பிரதி காவல்துறைமா அதிபரிடம் தஞ்சமடைந்த ஊடகவியலாளர்!

thumb large 659 2
thumb large 659 2

ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக குறித்த ஊடகவியலாளரை இலக்கு வைத்து அக்கரைப்பற்று காவல் நிலையத்தை சேர்ந்த உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முன்னணி தொலைக்காட்சி ஒன்றின் பிராந்திய ஊடகவியலாளரான கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வரும் சஹீர் அஹமட் பாறுக் (வயது -29) மீது குறித்த அக்கரைப்பற்று காவல் நிலைய உயர் அதிகாரியினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பிரத்தியேக வேலை ஒன்றுக்காக அக்கரைப்பற்று பிரதான வீதியில் இருக்கின்ற முஸ்லிம் மையவாடிக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் இரவு 8.35 பயணம் செய்த வேளை EP KF 0842 இலக்கமுடைய காரில் வந்த குறித்த உயரதிகாரி தனது (ஊடகவியலாளர்) மோட்டார் சைக்கிளை நிறுத்தி இவ்வச்சுறுத்தலை தனக்கு விடுத்துள்ளதாக ஊடகங்களிடம் பேசும் போது குறிப்பிட்டார்.

அத்துடன் மேலும் தெரிவித்த குறித்த ஊடகவியலாளர் மோட்டார் சைக்கிளை அந்த இடத்தில் நிறுத்திய பின்னர் சிவிலுடையில் குறித்த அதிகாரி என்னை நோக்கி வருவதை அவதானித்தேன். அதன் பின்னர் என்னை நோக்கி அவர் கடும் கோபத்தில் இவ்வாறு சொன்னார்.

எனக்கு எதிராக உதவி காவல்துறை அத்தியட்சகர் மற்றும் மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபரிடம் உள்ள முறைப்பாடுகளை மீளப்பெறல் வேண்டும் அத்துடன் மனித உரிமை மீறலில் வழக்கு விசாரணையை வாபஸ் பெற வேண்டும் அப்படி இல்லாவிட்டால் உன்னை இந்த மையவாடிக்கு வெகுவிரைவில் புதைப்போம்..நீ யாருடன் மோதுகிறார் என்று உனக்கு தெரியாதா… வருகின்ற வாரத்துக்குள் மனித உரிமை மீறல் வழக்கு விசாரணையில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இடம் பிடிப்பாய் இல்லாது விட்டால் உயிருடன் புதைக்கபடுவாய்..அச்சுறுத்தி விட்டு சென்றார் என குறிப்பிட்டார்.

மேலும் குறித்த உயர் காவல்துறை அதிகாரி கடந்த 02.09.2021 அன்று ஊடக கடமைக்குச் சென்ற வேளை என்னை காவல்துறை குழு ஒன்றுடன் இணைந்து தாக்கி காயப்படுத்தியதுடன் கமராவினையும் உடைத்துள்ளதை என்னிடம் உள்ள காணொளி ஆதாரத்தில் குறிப்பிட்டுள்ளேன். எனவே இது தொடர்பாக எனக்கு நீதி ஒன்றினை சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பெற்றுத்தர வேண்டும் .எனக்கு திருமணம் ஆகி 6 வயது ,1 வயது குழந்தைகள் உள்ளனர் என தெரிவித்தார்.