மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரின் உதவியாளர் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு மாநகரசபை 720x375 1
மட்டக்களப்பு மாநகரசபை 720x375 1

விடுமுறையில் இருந்த மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றிவரும் காரியாலய உதவியாளரை காரியாலயத்துக்கு வரவழைத்து அவர் மீது மாநகரசபை ஆணையாளர் தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த மாநகரசபையில் காரியாலய உதவியாளராக கடமையாற்றிவரும் ஜனார்த்தன் என்பவர் இன்றைய தினம் விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார் இந்த நிலையில் மாலை 5.30 மணிக்கு மாநகரசபை ஆணையாளர் காரியாலயத்துக்கு வருமாறு அழைத்ததையடுத்து அவர் அங்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் காரியாலயத்தில் ஆணையாளர் தலைமையில் ஒரு திட்டமிடல் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற காரியாலய உதவியாளரிடம் நீ என்ன மக்களிடம் பணம் வாங்குவதாக ஆணையாளர் கேட்டுள்ளார் அதன்போது அவர் நான் அப்படி வாங்கவில்லை நான் வாங்கியதை நிரூபிக்குமாறு தெரிவித்தார்.

இதனையடுத்து காரியாலய உதவியாளரின் மீது ஆணையாளர் தாக்கி அவர் அணிந்திருந்த ரீசேட்டை கிழித்துள்ளார். இதனால் காயமடைந்த உதவியாளர் மட்டு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேவேளை மாநகரசபை ஆணையாளர் தன்னை காரியாலய உதவியாளர் தாக்கியதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.