நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் அதிகமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் லாஃப் நிறுவனம் சமையல் எரிவாயுவினை விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் கே.எம்.வேகப்பிட்டிய தெரிவித்தார்.
இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய சமையல் எரிவாயுவின் தரம் பரிசோதிக்கப்பட்டதன் பின்னரே அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை மற்றும் தரக்கட்டளை நிறுவனத்தின் அனுமதியுடனேயே விநியோகம் முன்னெடுக்கப்படுகிறது.
முதற்கட்டமாக மேல் மாகாணத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன. எதிர்வரும் இரு தினங்களில் சகல பாவனையாளர்களுக்கும் விநியோகம் இடம்பெறும். தற்போது 2000 தொன் எரிவாயுவினை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பில் அந்நிறுவனத்தின் அதிகாரியொருவரிடம் வினவிய போது ,
ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மாத்திரம் கடந்த வாரம் முதல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவின் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு, அவை இரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் கிடைப்பதற்கு சுமார் ஒரு வார காலம் செல்கிறது.
முன்னரைப் போன்றல்லாமல் தற்போது சமையல் எரிவாயுவை விநியோகிப்பதற்கான நடைமுறைகள் பல காணப்படுகின்றமையால் குறிப்பிட்டவொரு தினத்தை ஸ்திரமாகக் குறிப்பிட முடியாது. எனினும் விரைவில் சந்தைக்கு லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.