திருக்கோவில் காவல் நிலைய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சந்தேகநபரின் வாக்குமூலம் தொடர்பில் மேலதிக விசாரணை

thumb queen 1 1
thumb queen 1 1

அம்பாறை – திருக்கோவில் காவல் நிலையத்தில், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலம் குறித்து, காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை(24) இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் மரணித்ததுடன், இருவர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தரிடம், காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமது தாயாரைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு செல்வதற்கு விடுமுறை கிடைக்கப்பெறாமை காரணமாக, குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக, அந்த காவல்துறை உத்தியோகத்தர், விசாரணைகளில் தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார்.

எனினும், குறித்த காவல்துறை உத்தியோகத்தருக்கு இறுதியாக ஏழு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருந்ததாக விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு மாதமும் அவர் விடுமுறை பெற்றுள்ளதாகவும், விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவரின் வாக்குமூலம்குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.