ஒரே சட்டம் என்ற கொள்கையை அரசாங்கம் அமுல்படுத்தவில்லை – ஞானசார தேரர்

gnanasara thero
gnanasara thero

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் நாட்டிற்கு ஒரே சட்டம் என்ற கொள்கையை அமுல்படுத்தவில்லை எனவும் அதனை நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் மக்களைச் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக முன்வைத்த யோசனைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர் நிலமின்மை மற்றும் கல்விக்கான வசதிகள் இல்லாமையே அவர்களைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளாகும் என்றார்.

தேசியக் கொள்கைக்குப் பதிலாக அரசியல் கட்சிகளின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதே நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலைக்குக் காரணம் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் அனைத்து சமூகங்களும் சம உரிமைகளையும் வளர்ச்சி வாய்ப்புகளையும் அனுபவிக்க வேண்டும் என்று மக்கள் நம்புகிறார்கள். இதனைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட முறைமைக்குப் பதிலாக நாட்டின் தேவைக்கு ஏற்றவாறு புதிய சட்ட முறைமை கொண்டு வரப்பட வேண்டியது அவசியமாகும் என கூறியதோடு நாம் தற்போது ஒரு பேரழிவு நிலையை நோக்கி செல்வதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய சொத்துக்களைப் பாதுகாக்க கடுமையான சட்டங்களை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் தேரர் சுட்டிக்காட்டினார்.